Showing posts with label எளிமைக்கு மறுபெயர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத். Show all posts
Showing posts with label எளிமைக்கு மறுபெயர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத். Show all posts

Saturday, December 12, 2009

எளிமைக்கு மறுபெயர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்




எளிமைக்கு மறுபெயர்
டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்
-ராம்கி,

சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்களை பல முறை சந்தி்த்த வேலை.........

பல ஆண்டுகளுக்கு முன்பு சைல்டு டிரஸ்ட் மருத்துவமனையை சங்கர மடம் நிர்வாகிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்ட போது ஒரு பத்திரிக்கைக்காக மருத்துவனை துவக்க விழாவிற்கு சென்றேன். காஞ்சி மடாதிபதிகள் அவ்விழாவிற்கு வருகை தந்தார்கள். அப்போது டாக்டர் பத்ரிநாத் அவர்களும் வந்திருந்தார்கள். அந்த இடம் முழுவதும் ஒரே மக்கள் கூட்டம். சுவாமிகள் ஒரு அறையிலிருந்து வெளியே வருவதைக் கண்ட டாக்டர் பத்ரிநாத் அவர்கள் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து பொது இடம் என்றும் பாராமல் நமஸ்காரம் செய்வதை கண்டேன். இத்தனை பெரிய கண் மருத்துவர் இவ்வளவு பெரிய கூட்டங்களுக்கு இடையேயும் காஞ்சிமட சுவாமிகள் பாதம் பணிந்து வணங்கியது என்னை மிகவும் நெகிழ வைத்தது, அப்போதே அவரின் பணிவு எனக்கு மிகவும் பிடித்துப்போனது,

வேறோரு சமயம் அகில இந்திய கண் மருத்துவர்கள் மாநாட்டிற்கு சென்ற போது, மும்பை டாக்டர் எஸ் நடராஜன் அவர்கள் விஞ்ஞான குழு தலைவராக இருந்தார். அப்போது அந்த மாநாட்டில் டாக்டர் நடராஜன் அவர்கள் எனக்கு டாக்டர் பத்ரிநாத் அவர்களை தனியே அறிமுகம் செய்து வைத்தார். “சார். இவர் தான் ராம்கி.... டாக்டர் பாபு அவர்களிடம் பயிற்சி பெற்று தற்போது மும்பை வந்து என்னுடன் இருக்கிறார்..நம்ம அப்ஸ்டாரக்ட் புத்தகத்தை தயாரித்தவரும் இவர் தான்”, என்று அறிமுகப்படுத்தினார். இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து என்னை மனதார பாராட்டினார். அன்று காஞ்சி மடசுவாமிகளிடம் அவர் நடந்து கொண்ட பணிவு எனக்கு சட்டென நினைவுக்கு வர நானும் அவரது பாதம் தொட்டு ஆசிர்வாதம் வாங்கினேன். “அடடே” என்றவாறு என் தோள்களை எடுத்து “நீங்க நடராஜன் கூட இருப்பது எனக்கு முன் கூட்டியே தெரியும். புத்தகம் ரொம்ப நல்லா வந்திருக்கு....டாக்டர் நடராஜனுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது கீப் அட் அப் ராம்கி” என்று பாராட்டினார். “எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்” என்று கூறி விடைபெற்றேன். இது எனது முதல் சந்திப்பு. பிறகு அதற்கு அடுத்த நாள் அந்த மாநாட்டில் மதிய உணவு உட்கொள்ளும் இடத்தில் டாக்டர் பத்ரிநாத் தனியாக இருப்பதை பார்த்தேன். நானே மீண்டும் அறிமுகம் செய்து கொண்டு “என்ன சார் நன்றாக சாப்பிட்டீர்களா?” என்று விசாரித்தேன், “ஓ ஆச்சுப்பா…” என்ற என் தோள்களில் கைபோட்டு மெல்ல நடந்தார். அத்தனை பெரிய மருத்துவர் இத்தனை எளிமையாக இருக்கிறாரே என்று வியந்தேன்,. அவ்வாறு நாங்கள் மெல்ல நடக்கையில் எனது குடும்பத்தாரை பற்றி விசாரித்தார். “மும்பை சௌகரியமாக இருக்கா.. மும்பை பிடிச்சிருக்கா” என்றல்லாம் சாதராணமாக ஒரு பந்தா இல்லாமல் என்னிடம் பழகியதை கண்டு நெகிழ்ந்து போனேன்.


பலமுறை டாக்டர் நடராஜன் அவர்கள், தான் டாக்டர் பத்ரிநாத் அவர்களுடன் பணியாற்றிய போது நடந்த நிகழ்ச்சிகளை எங்களுக்கு சொல்வார். சில சிக்கல்களை எவ்வாறு டாக்டர் பத்ரிநாத் அவர்கள் கையாள்வார் என்பதையும் அடிக்கடி சொல்லுவார். மற்றும் எவ்வாறு தன்னை சந்திக்க வரும் நோயாளிகளிடம் அவர் நடந்து கொள்வார் என்பதையும் மிக உயர்வாக டாக்டர் நடராஜன் சொல்லும் போது மிகவும் ஆவலாக கேட்போம். இவரது பல பண்புகளை டாக்டர் நடராஜன் அப்படியே பின்பற்றி வருகிறார் என்றால் அது மிகையாகாது. டாக்டர் நடராஜன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் டாக்டர் பத்ரிநாத் தம்பதிகள் வைத்துள்ளதை கண்கூடாக கண்டேன்.


ஒரு சில மாதங்கள் கழித்து டாக்டர் பத்ரிநாத் அவர்கள் மும்பை வழியாக வேறு ஒரு மாநிலத்திற்கு செல்வதாக டாக்டர் நடராஜன் அவர்களுக்கு தகவல் வந்தது. அப்போது அவரது மருத்துவ மனையில் ஏகப்பட்ட நோயாளிகள் இருந்ததால், அவரால் விமான நிலையம்செல்ல முடியாத நிலை ஏற்பட்டது, என்னை அழைத்து உடனே விமான நிலையம் சென்று டாக்டர் பத்ரிநாத் அவர்களை சந்தித்து ஒரு பூங்கொத்து கொடுத்து, நான் வரமுடியாதை நிலையை விளக்கச் சொன்னார். காரில் விமான நிலையம் அடைந்தும் டாக்டர் பத்ரிநாத் தம்பதிகள் தங்கள் பெட்டிகளை எடுப்பதில் மும்மரமாக இருந்தனர். அப்போது நான் வெளியே இருந்து கையசைக்க திருமதி பத்ரிநாத் அவர்கள் என்னை பார்த்துவிட்டார்கள், “யாரோ வெளியே உங்களை பார்த்து கையசைக்கிறார்கள்” என்று தனது கணவரிடம் சொல்ல, டாக்டர் பத்ரிநாத் அவர்கள் என் பக்கம் திரும்பி கையசைத்து நேரே என்னிடம் வந்தார், “சார் டாக்டர் நடராஜன் வர இயலாததால் நான் வந்தேன்” என்று அவரது கையில் அந்த பூங்கொத்தை கொடுத்தேன். மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்ட அவர் “எதுக்கு இதெல்லாம்....” என்றவாறு நன்றி சொல்லி கைகொடுத்தார். “கொஞ்சம் இருங்கோ என் பெட்டியை கொண்டு வந்துவிடுகிறேன்” என்றபடி உள்ளே மீண்டும் சென்று தன் பெட்டியுடன் வெளியே வந்தார். வெளியே வந்ததும் தன் துணைவிக்கு “இவர் தான் ராம்கி..டாக்டர் நடராஜன் கிட்டே இருக்கார். நடராஜன் பூச்சென்டு கொடுத்து அனுப்பியிருக்கார்” என்றபடி பூச்சென்டை துணைவியாரிடம் கொடுத்தார் டாக்டர் பத்ரிநாத் அவர்கள். “சார் தங்களுக்கு கார் ஏதாவது வேண்டுமா? வேறு ஏதாவது உதவிகள் தேவைப்படுகிறதா” என்ற நான் பணிவுடன் கேட்க, “எல்லாம் ஓகே ராம்கி. இதோ இவங்க என்னை கூட்டிகிட்டு போகத்தான் வந்திருக்காங்க” என்று பக்கத்தில் இருவந்தவரை அறிமுகம் செய்தார். “நடராஜன் கிட்டே ரொம்ப கேட்டதா சொல்லுங்க. ரொம்ப தேங்ஸ் சொல்லிடுங்க” என்று கூறியபடி விடைபெற்றார்,

ஒரு சமயம் ஆதித்ய ஜோத் மருத்துவமனைக்கு டாக்டர் பத்ரிநாத் அவர்கள் விஜயம் செய்த போது எனது இருப்பிடத்திற்கும் வந்தார்... “சார் இதுநான் எனது இருக்கை” என்றேன். உடனே அதிர்ந்தவர் “இந்த சின்ன இடத்தில் அமர்ந்தா அவ்வளவு பெரிய வேலைகளை செய்கிறீர்கள்..உடனே டாக்டர் நடராஜன் அவர்களிடம் சொல்லி உங்களுக்கு பெரிய ரூம் கொடுக்கச்சொல்கிறேன்” என்றார்.


மற்றொரு முறை டாக்டர் பத்ரிநாத் அவர்கள் மும்பைக்கு வந்திருந்தார்கள். அன்று டாக்டர் நடராஜன் அவர்கள் ஊரில் இல்லை. முதலில் ஆதித்ய ஜோத் மருத்துவமனைக்கு வந்தபிறகு அவர்களை அழைத்துக்கொண்டு டாக்டர் நடராஜன் அவர்களின் இல்லத்தில் அவரது அன்னையை சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது. நான் வரவேற்பரையில் வரவேற்று அவரது பாதம் பணிய, யாரும் எதிர்பாராத விதத்தில் டாக்டர் பத்ரிநாத் அவர்கள் என் கையை எடு்த்து அவரது தலைக்கு மேலே வைத்து குனிந்துவிட்டார். ஒரு நிமிடம் பதறிப்போனேன். என்னே அவரது பணிவு, அங்குள்ள டாக்டர்களுக்கும் ஊழியர்களுக்கும் அறிமுகப்படுத்தினேன். பிறகு டாக்டர் நடராஜன் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச்சென்றேன். அப்போது மிக அன்போடும் கனிவோடும் என்னிடம் பேசினார். வீட்டில் என்னையும் அவர் அருகே அமரச்சொன்னார். அப்போது சில ஊழியர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு என்னிடம் கேட்டனர். டாக்டர் பத்ரிநாத் அவர்களிடம் ஊழியர்களின் விருப்பத்தை சொன்னபோது, “இதோ வருகிறேன்” என்று அனைவருடனும் புகைப்படம் எடுத்துகொண்டு அவர்களின் கைகளை குலுக்கி தன் மகிழ்ச்சியை தெரிவித்தார். ஒவ்வொரு புகைப்படம் எடுக்கும் போதும் “அட, நீங்களும் வாங்க ராம்கி” என்று உரிமையோடு கைபற்றி இழுத்து தன்னுடன் நிறுத்திக்கொண்டார். அப்போது அவரது துணைவியாரும் சகோதரரும் உடன் வந்திருந்தார்கள்.

மும்பையில் இகோனோமிக்ஸ் டைம்ஸ் நாளிதழின் சாதனையாளர் வருதினை வாங்க மறு சமயம் மும்பை வந்த டாக்டர் பத்ரிநாத் அவர்கள், எனக்கும் அழைப்பிதழ் கொடுத்து, டாக்டர் நடராஜன் அவர்களின் தந்தை டாக்டர் சுந்தரம் அவர்களையும் பத்திரமாக விழாவிற்கு அழைத்துவரும் படி கூறினார். மாலையில் விழா துவங்கும் முன் அவரை சந்தித்த போது இன்முகத்துடன் வரவேற்றார். அப்போதும் டாக்டர் பத்ரிநாத் அவர்கள் மிகவும் எளிமையாக இருந்தார். அனைவருடனும பணிவாகவே பேசுவதைக் கண்டேன். தனக்கு அருகே இருந்த லக்மே நிறுவனத்தில் மூத்த அதிகாரியான ஒரு பெண்மணியிடம் எங்களை அறிமுகப்படுத்தினார். இதுபோல அவரை சந்திக்க வந்த பெரிய விஐபிக்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவ்விழாவிற்கு மத்திய அமைச்சர் திரு, பா. சிதம்பரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். விழாவில் டாக்டர் பத்ரிநாத் அவர்கள் பேசும் போது, “தான் இவ்விருதினை தன் ஊழியர்கள் சார்பாக வாங்க வந்துள்ளேன்” என்று பணிவுடன் கூறியபோது பெரிய கைதட்டல். விழா முடிந்ததும் திரு. சிதம்பரம் அவர்களையும் சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இவ்விழா முடிந்ததும் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விருந்திலும் நாங்கள் கலந்து கொள்ள வேண்டும், “சாப்பிட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும்” என்றார் டாக்டர் பத்ரிநாத் அவர்கள். இந்நிகழ்ச்சியின் போது அவருடன் பேச நிறைய சந்தர்ப்பம் கிடைத்தது. நான் சொல்வதை மிக பொறுமையாகவும் கவனமாகவும் கேட்டார். எனது குடும்ப சுழ்நிலையை விளக்கினேன். “உங்களைப்பற்றியும் உங்களின் திறமையும் எனக்கு நல்லா தெரியம். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எங்கள் மருத்துவமனைக்கு வரலாம். சென்னைக்கு வரும் போது என்னை வந்து பாருங்க”, என்று தட்டிக்கொடுத்து ஊக்கம் அளித்தார்.

மும்பையிலிருந்து கோவை வந்த உடன் நான் கோவைக்கு வந்துவிட்டதை அவருக்கு தெரியப்படுத்தியதற்கு இமெயில் மூலமாக வாழ்த்தினார்,
2009 ஜனவரி 1ம் தேதி அவருக்கு போன் செய்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன். அப்போது மிகவும் மகிழ்ந்த அவர், அவ்வருடம் நான் தயாரித்த அப்ஸ்டராக்ட் புக் பற்றி மறவாமல் குறிப்பிட்டு “ரொம்ப நன்றாக வந்துள்ளது, நான் மிகவும் மகிழ்கிறேன். டாக்டர் ராமமூர்த்தி விஞ்ஞான குழு தலைவர் ஆன உடன் இந்த புத்தகம் கொண்டு வருவதுதான் முதல் சவால். அது பற்றி டாக்டர் ராமமூர்த்தியின் தந்தையை சந்தித்தபோதும் சொன்னேன். வாழ்த்துக்கள்” என்று நீண்ட நேரம் தானாகவே நினைவுகொண்டு அப்புத்தகத்தைப்பற்றி தன் கருத்துக்களை மனம்விட்டு சொல்லி எனக்கு உற்சாகமளித்தார் டாக்டர் பத்ரிநாத் அவர்கள். மேலும், அடுத்த முறை சென்னைக்கு வரும்போது கட்டயாம் வாங்க...நாம் சந்திப்போம் என்றார்.

பலமுறை போனில் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர் படிக்கும் காலத்தில் தன் பெற்றோர் இறந்த பின் கிடைத்த இன்சூரன்ஸ் பணத்தில் தான் படித்து மருத்துவ படிப்பை முடிந்தார் என்று ஒரு பத்திரிக்கையில் படித்த பின், அச்செய்தியை படித்தபோது நான் மிகவும் நெகிழ்ந்ததாக போனில் சொன்னேன். அப்போது அவர் எப்படி கஷ்டப்பட்டு படிப்படியாக உயர்ந்துள்ளார் என்பது புரிந்தது,


டாக்டர் பத்ரிநாத் அவர்கள் நான் எப்பொது இமெயில் அனுப்பினாலும் தவறால் இரத்தின சுருக்கமாக ஆனால் “நச்” என்று தவறாமல் பதில் அனுப்புவார்.

நான் பழகிய படதயாரிப்பாளரும், ஸ்டூடியோ நிறுவனருமான மறைந்த நாகிரெட்டி அவர்களும் மிகவும் எளிமையாகவே எப்போதும் இருப்பார். அதுபோன்றே டாக்டர் பத்ரிநாத் அவர்களும் இவ்வளவு பெயரும், புகழும் இருந்தாலும் எளிமையாக இருந்து பலருக்கு முன்னோடியாக திகழ்கிறார் என்றால் மிகையாது, பல கண்மருத்துவர்களுக்கு குலதெய்வமாகவும், குருவாகவும் டாக்டர் பத்ரிநாத் திகழ்கிறார். லட்சக்கணக்கான கண்களுக்கு வெளிச்சம் காட்டியவர் நமக்கு எல்லாம் சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார் என்பதை எவராலும் மறுக்க முடியுமா என்ன?

ராம்கி
09790684708