Monday, November 28, 2011

DR. N.S. SUNDARAM அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

DR. N.S. SUNDARAM அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது’



தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ சென்னையை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் என்.எஸ், சுந்தரம் MBBS, DO, MS., அவர்களுக்கு அண்மையில் ஆளுநர் ரோசய்யா அவர்களால் வழங்கப்பட்டது அவருக்கு வாழ்த்துச் சொல்லும் சமயத்தில், அவருடன் சில ஆண்டுகள் நெருங்கிப் பழகிய ராம்கி அவர்கள், தன்னுடைய அனுபவங்களை நம்மிடைய மனம் திறக்கிறார்:

டாக்டர் சுந்தரம் அவர்கள் ஜனவரி 26, 1929ல் பிறந்தவர். சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவ மனையில் superintendentஆக பதவி வகித்தவர். டாக்டர் பத்ரிநாத் போன்று, இன்றைய கண் மருத்துவர்களுக்கு இவரும் ஒரு முன்னோடி எனலாம். இவரை முதன் முதலில் எங்கு சந்தித்தேன் என்று யோசித்துப்பார்க்கிறேன். சுமார் 10 வருடங்களாக என் மரியாதைக்குரியவர் இவர். இவரது தந்தை நடராஜப்பிள்ளையும் கண் மருத்துவர். இவரது மகன் டாக்டர் நடராஜன் அவர்களும் உலகம் போற்றும் ரெட்டினா கண் மருத்தவர். டாக்டர் சுந்தரம் அவர்கள் நூற்றுக்கணக்கான கண் முகாம்களை பல தொண்டுநிறுவனங்களான அரிமா சங்கம், சாய் டிரஸ்ட், காஞ்சி டிரஸ்ட். VHERDS, NIVH மூலம் நடத்தி மக்களுக்கு சேவை செய்தவர். முகாம்களின் போது, கண் பாதுகாப்பு பற்றிய அருங்காட்சியம் ஏற்பாடு செய்வது இவரது தனிசிறப்பு. பணியில் இருக்கும்போது இவருக்கு பிடிக்காத ஒரு வார்த்தை ‘சிபாரிசு…..’ யாரிடமும் சிபாரிசுக்கு செல்லமாட்டார். ‘சொந்த முயற்சியால் ஒருவன் முன்னுக்கு வரவேண்டும்’ என்பார்.

இவருடன் பழகிய சிலமாதங்களின் ‘அப்பா’ என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தேன். சென்னையில் இவரது திநகர் இல்லத்தில் பல முறை சந்தித்துள்ளேன். அப்போதெல்லாம் இவரும் இவரது துணைவி திருமதி கமலா சுந்தரம் அவர்களும் ‘இரவு சாப்பிட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும்’ என்று அன்புகாட்டுவார்கள்.

என்னுடன் ஒரிரு கண் மருத்துவர்கள் மாநாட்டிற்கு சுந்தரம் அவர்கள் வந்துள்ளார். இவர் நினைத்தால் இவரது மகன் டாக்டர் நடராஜன் தங்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கலாம். அவ்வாறு செய்யாமல் ‘நான் ராம்கியுடன்,சாதாரண அறையில் தங்கிக்கொள்கிறேன்’ என சொல்லும் எளிமையானவர். ஒரு ரயில் நிலையத்தில் நான் அரைகால் டிராயருடன் இருந்ததைப்பார்த்து ‘இது என்ன வேஷம்?’ என்று கிண்டல் செய்தார்.

எனக்கு இவர் வழங்கிய அறிவுரைகள், தன்னுடன் பகிர்ந்த கொண்ட சொந்த மற்றும் பொது விஷயங்கள் ஏராளம் ஏராளம். எப்படி குடும்பத்தை வழிநடத்தவேண்டும், எப்படி எளிமையாக வாழவேண்டும் என்றெல்லாம் எனக்கு அடிக்கடி உதாரணத்துடன் எடுத்துரைப்பார். என்னுடன் அதிகம் பேசும் இவரைப்பார்த்து ‘ராம்கி சரியா இவர்கிட்டே நல்லா மாட்டிகிட்டாரு’ என்று சொல்பவர்களுக்கு, நான் எத்தனை நல்ல புத்திமதிகள் இவரிடம் இருந்து பெற்றேன் என்பது பலருக்கும் தெரியாது.

மும்மையில் நான் தங்கியிருந்து வீட்டிற்கு ஒருமுறை என்னுடன் பல தூரம் நடந்தே வந்துவிட்டார். நாங்கள் இருவரும் தனியாக இருக்கும் போது, மும்பையில் சாப்பிடச் செல்வோம். ராம்நாயக் இட்லி ஷாப்புக்கு சென்று சுடச்சுட இட்லி சாப்பிடுவோம். அடுத்து முறை மும்பைக்கு வந்தபோதும், அங்கேயே என்னை அழைத்துச்சென்றார்.

இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத போது, அன்போடு கவனித்துக்கொண்டு வருகிறார். ஏதாவது ஜோக் அடித்துக்கொண்டு எந்த விஷயத்தையும் ரொம்ப சீரியசாக எடுத்துகொள்ளமாட்டார். ‘கவலைப்பட்டு என்ன லாபம் ராம்கி, எல்லாத்தையும் வாழ்க்கையிலே நாம் சந்தித்தே ஆகவேண்டும். யாரும் தப்பிக்கமுடியாது’ என்றவர். இந்த வயதிலும் தன் மனைவிக்கு அனைத்து உதவிகளையும் முகம் சுளிக்காமல் செய்வார். ஒரு முறை என்னிடம், ‘கமலாவிற்கு உடம்பு நன்றாக இருந்தபோது எங்களை எல்லாம் ரொம்ப நல்லா கவனிச்சுப்பா… இப்போ அவளாலே முடியாத போது, நான் அவளை கவனிச்சுக்கறேன். அப்படி செய்யறது எனக்கு ஒரு பிரதிபலன் செய்வதுபோல இருக்கு’ என்று தன் மனைவி மீது கொண்ட பாசத்தை என்னிடத்தில் வெளிப்படுத்தினார்.

தான் எழுதிய புத்தகம், தான் தயாரித்து நாடகம் போன்றவற்றை படிக்க மற்றும் கேட்கச்சொல்வார். ஒரு பையில் ஏராளமான பேப்பர்கள் இருக்கும். ஏதாவது தேவையென்றால் அந்த பையில் தேடி எடுத்துவிடுவார். தான் படித்த புத்தகத்தில் ஏதாவது நல்ல விஷயங்கள் இருந்தால், அதை மறவாமல் எனக்கு கோடிட்டுக்காட்டி படிக்கச்சொல்வார். பின் அதுபற்றி தன் வாழ்வில் நடந்த சம்பவத்தையும் சேர்த்துச் சொல்லிவிளக்குவார். ‘என்ன படிச்சது புரிஞ்சுதா, அல்லது நான் விளக்கட்டுமா’ என்று பலமுறை கேட்டு நமக்கு நன்கு மனதில் படும்வரை எளிதில் விடமாட்டார்.

பல இடங்களுக்கு நானும் இவரும் காரில் செல்வோம். அப்போதும் தன் மனம் திறந்து என்னுடன் பேசுவார். பழகிய ஓரிரு நாட்களிலேயே ஒருவரை சரியாக எடைபோடுவார். சரியான நேரத்தில் சர்க்கரை நோய்க்காக இன்சுலின் ஊசியை தானே ஏற்றிக்கொள்வார். மதிய நேரம் வீட்டிற்கு சாப்பிடச் செல்லும்போது ‘ராம்கி, வாங்க வீட்டிலே போய் சாப்பிடலாம்’ என்று அழைத்துசெல்வார். நான், இவர், இவரது துணைவியார், டாக்டர் நடராஜன் எல்லாம் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். இவரது குடும்பத்தார் அனவைரும் என்னையும் ஒரு குடும்பநபராக பாவித்து அன்பு செலுத்துவாரகள். ஒருமுறை என் மனைவி கமலா அம்மாவிற்கு உணவு ஊட்டிய சம்பவம் என் கண் முன்னால் நிற்கிறது. நான் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது, ‘ராம்கி நாளைக்கும் வாங்க..சாப்பிட்டுவிட்டு போகலாம்’ என்று அம்மா என்னை பலமுறை அழைத்ததுண்டு. மும்பையில் இந்த தம்பதிகளை சந்திக்கும்போதெல்லாம் என் பெற்றோருடன் இருந்தது போன்ற உணர்வு ஏற்படும். இதை எழுதும்போது என் கண்கள் குளமாகிறது.

இந்த தம்பதிகளின் மும்பையில் நடந்த திருமணநாள், பிறந்த நாட்களில் நான் முன்வரிசையில் இருப்பேன். அச்சமயங்களில் டாக்டர் நடராஜன் இவர்களுக்கு பலவித பரிசுகளை அளித்து மகிழ்வார். இருவருமே தற்போது என்னுடன் போனில் பேசும்போது ‘எப்ப வரீங்க பாம்பேக்கு..வந்திடுங்க சீக்கிரம்’ என்பார்கள். ‘என் குடும்பநிலை காரணமாக நான் கோவையில் தங்கவேண்டியிருக்கிறது’ என்று என் நிலையை விளக்கியதும், ‘உங்க மகன் படிப்பை முடிந்ததும் இங்கே வந்து எங்களுடன் வேலைபண்ணுங்க’ என்று பாசத்தோடு அழைப்பார்கள். நீங்க வந்திடுங்க நாம எல்லோரும் சேர்ந்து நிறைய வேலை செய்யலாம் என்று ஊக்கம் அளிப்பார்.
மும்பையில் இருக்கும்போது நான் சென்னைக்கு செல்கிறேன் என்றால், ‘எங்க வீட்டுக்குப்போய் ஸ்வர்ணாவை பார்த்துவிட்டு வாங்க’ என்று சொல்வார்கள். செல்லவில்லை என்றால், ‘ஏன் பார்க்காம வந்திட்டீங்க, ராம்கி’ என்றும் மறவாமல் கேட்பார்கள்.
டாக்டர் சுந்தரம் அவர்கள் என்வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்திருந்து வாழ்த்தினார்கள். ‘நான் சர்வீஸிலே இருந்தபோது என்னால ஒரு வீட்டை சொந்தமா வாங்க முடியலே. ஆனா நீங்க சர்வீஸிலே இருக்கும்போது ஒரு சின்ன வீட்டை வாங்கீட்டீங்க…வாழ்த்துக்கள்’ என்றார்.

டாக்டர் நடராஜன் தன் வீட்டிலிருந்து போனில் பேசினால், உடனே தன் பெற்றோர்களிடம் போனைக்கொடுத்து ‘ராம்கி லைனில் இருக்கார், பேசுங்க’ என்று பேசவைத்து மகிழ்வார்கள்.
நான் 4 வருடங்களுக்கு முன் மும்பையிலிருந்து சென்னைக்கு கிளம்பியபோது, டாக்டர் சந்தரம் அவர்கள் நானும் அவரும் எடுத்துக்கொண்ட போட்டோவை ஒரு காபி கப்பில் பதிவு செய்து ‘என் சார்பாகவும் உனக்கு நினைவுபரிசு அளிக்கிறேன்’ என்று சொல்லி பரிசளித்தார்.

இவர் அரசாங்க வேலையில் இருந்தபோது, தன் சக ஊழியர்களிடம் எப்படி கடுமையாக, அதேசமயம் நேர்மையாக நடந்துகொண்டார் போன்றவற்றை என்னுடன் விவரமாக பகிர்ந்து கொண்டார். கலைஞர் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் அவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஒரு முறை எம்ஜிஆர் அவர்களை சந்தித்தபோது, ‘எல்லா படங்களிளும் நல்லவர் போலவே நடிக்கிறீர்கள், அவ்வாறு நீங்கள் படம் எடுக்கச்சொல்கிறீர்களா, அல்லது அவ்வாறே கதைகள் அமைகிறதா?’ என்று நேரிடையாக கேட்ட தைரியசாலி டாக்டர் சுந்தரம் அவர்கள். அதற்கு எம்ஜிஆர் சொன்ன பதில் பெறும் ‘புன்சிரிப்பு…’ அதுபோன்று அரசுப்பணியில் இருந்தபோது அப்போதைய அமைச்சர்களிடம் தைரியமாக பேசுவாராம் இவர்.

இவர் பாண்டிச்சேரி அன்னையுடன் தன் இளம்வயதில் சந்தித்த நிகழ்ச்சிகளை என்னிடம் சொன்னதைக்கேட்டு, ‘ஞான ஆலயம்’ என்ற புத்தகத்தில் ஒரு கட்டுரை எழுதினேன், அதைப்படித்துவிட்டு ‘நன்றாக இருக்கிறது ராம்கி’ என்றார். இளம் வயதில் ரமண மகரிஷியையும், காஞ்சி முனைவரையும் பலமுறை சந்தித்தவர். இந்த மகான்களின் சந்திப்பால் ‘எளிமையாக வாழவேண்டும்’’ என்று முடிவுசெய்து அதன்படியே வாழ்கிறார்.

இவரிடம் பயிற்சி பெற்ற கண் மருத்துவர்கள் ஏராளம். நாங்கள் பல மாநாடுகளில் ஒன்றாக இருக்கும்போது, ஓரிருவர் இவரை அடையாளம் கண்டு கொண்டு, இவரை சந்தித்து பேசுவார்கள். சில அந்நாள் மாணவர்கள் இவரை பார்த்தும், பார்க்காதது போல் சென்றுவிடுவதையும் கண்டுபிடித்து என்னுடன் அவரைப் பற்றி விளக்குவார்.

இவரது அடுத்த நண்பர் ‘கேமரா…’ எந்த இடத்திற்கு செல்வதாக இருந்தாலும் ஒரு கேமரா இருக்கும். ‘டக் டக்’ என படம் எடுத்துக்கொண்டேயிருப்பார். இவருக்கு ஒரு ‘லேப் டாப்’ வைத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பியபோது, டாக்டர் நடராஜன் உடனே அதை வாங்கி கொடுத்து மகிழ்வித்தார். பல நாடுகளுக்கு அந்த நாட்களிலே சென்று வந்தவர். இவரது சென்னையில்லத்தில் ஏராளமான புத்தகங்களை வைத்துள்ளார். ‘இந்த புத்தகங்களின் அருமை என் குடுமபத்தாருக்கு தெரியாது ராம்கி, இதை எல்லாம் எடுத்துபோட்டுங்க’ என்கிறார்கள் என்று ஒரு முறை வருத்தப்பட்டார். அது போன்று பழைய புகைகப்படங்களையும் பாதுகாத்துவைத்துள்ளார்.

வயது 85+ஆனாலும் என்னுடனோ அல்லது மற்ற இளம்வயதுகாரர்களுடன் பேசும்போது சமவயதுக்கு ஏற்றார் போல் ஜோக் அடித்துக்கொண்டு சட்டென இளைஞனாகிவிடுவார். கிண்டல் அடித்தது, சிரிக்க சிந்திக்க வைப்பவர்.


இவரது பொழுதுபோக்கு, நல்ல புத்தகங்கள் படிப்பது, மாணவர்களுக்கு கண்சம்பந்தமாக சொல்லித்தருவது, அதுபற்றி பேசுவது, மற்றும் போட்டோ எடுப்பது போன்றவை. மாணவர்களுக்கு சொல்லித்தரும்போது, பல கேள்விகளை கேட்டு மாணவ மாணவிகள் எளிதில் புரிந்துகொள்ளும்படி விளக்கமளிப்பார் டாக்டர் சுந்தரம் அவர்கள்.

படிகள் முடியும் இடத்தில் இரண்டு ஓரத்திலும் மஞ்சள் ஸ்டிக்கரை ஒட்டிவிட்டால் பெரியவர்கள் படிஏறி இறங்க சௌகரியமாக இருக்கும் என்ற டிப்ஸ் தந்தவர்.

எனது படைப்புகளை மனம் திறந்து பாராட்டுவார். ஒவ்வொரு வருடமும் நான் தயாரிக்கும் கண் மருத்துவர்களுக்கான அப்ஸ்ட்ராக்ட் புத்தகத்தை முழுவதும் படித்து பின் போனில் அழைந்து பாராட்டிவருகிறார். இப்புத்தகத்தில் கடைசியில் வரும் இன்ட்எக்ஸ் பகுதியை நான் சற்று பெரிய எழுத்ததுக்களில் பிரின்ட் செய்திருந்ததை கூர்மையாக கவனித்து, பாராட்டினார். கண்பற்றி அருங்காட்சியம் அடிக்கடி நடத்துவார். அதுசம்பந்தமாக நிறைய மாடல்கள், சார்ட்களை தயாரித்து பத்திரப்படுத்தி வருகிறார்.

கோவிலுக்கு அதிகம் செல்வது மற்றும் பூஜைகளுக்கு நிறைய செலவுசெய்வது போன்றவற்றை விரும்பமாட்டார்.

தன் கடைசி மூச்சு உள்ளவரை, மக்களிடம் கண் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது தான் இந்த எளிய இளைஞரின் லட்சியமாம்.
RAMKI

Tuesday, November 1, 2011

ராம்கியும் பாலாவும்


ராம்கியும், பாலாவும்

எனது முன்னாள் சுருக்கெழுத்து பயிற்சிக்கூடத்தின் சகநண்பர் பாலா எனும் பாலசுப்ரமணியம். நானும் இவரும் சேர்ந்தால் எப்போதும் கலாட்டா, தமாஷ் பேச்சுத்தான். நீண்ட இடைவெளிக்குப்பிறகு ரமேஷ் மூலம் இவரது நட்பு மலர்ந்தது. கோவை வரும்போதெல்லாம் பாலா என்னிடம் பேசுவார், நாங்கள் சந்திப்போம். அண்மையில் அவரது வீட்டிற்கு நானும், சீதாவும் சென்று இருந்தோம்.



KRISHNA KUMAR, RAMKI & PM BALASUBRAMANIAM & GIRIJAN, NEW CEO
PHOTO COURTESY: DR.D.CHANDRASEKAR, COVAI

இன்று இந்துஸ்தான் யூனிவர்சல் நிறுவத்தில் பாதுகாப்பு (சேப்டி) அதிகாரியாக பணியாற்றும் பாலா அண்மையில் எங்கள் மருத்துவமனையில் நடந்த தீபாவளி கொண்டாட்டதின் முடிவில் கலந்து கொண்டார். எனது தலைவர் மற்றும் சகஊழியர்களை அறிமுகப்படுத்தினேன். பார்ட்டியில் கலந்து கொண்டபோது, 'என்னடா ஒரே மலையாள அழகிகளா இருக்கு' என்று ஜொல்லுவிட்டான் வழக்கம்போல். அன்று இரவு எனது இல்லத்தில் தங்கி அடுத்தநாள் காலை 6 மணிக்கு கிளம்பிச்சென்றார். என்னை 'வாடா போடா' என்று அழைக்கும் ஒருசில நபர்களில் பாலாவும் ஒருவன்...

பாலா ஒரு சிறந்த பாடகன், நாங்கள் சேர்ந்தால் பழைய பாடல்களை சேர்ந்து பாடி மகிழ்வோம். தற்போது பாடுவதை இவரது மகன் தொடர்கிறார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பாலாவின் அம்மாவை சந்தித்து, நானும் சீதாவும் ஆசிபெற்றோம், இதை மறக்கமுடியாது!!!
வாழ்க பாலா பல்லாண்டு.......


ராம்கி

Friday, October 28, 2011

விவேகானந்தன், குமார், சுவாமி சந்திப்பு

குமாரின் வீட்டிற்கு நீண்ட ஆண்டுகளுக்குப்பின் விவேகானந்தன் வந்தபோது


விவேக் காரைவிட்டு இறங்கியதும் என்னால் உடனே அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை (நிஜமா...) யாரோ ஒரு மாமா யார் வீட்டுக்கோ வருகிறார் என்றுதான் நினைத்தேன். சீதா விவேக் இவர் தாங்க என்று சொன்ன பிறகு தான், அட இவரு நம்ம ஆளு விவேக் என்று அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. எத்தனை மாற்றங்கள்....


குமாரும் விவேகானந்தன்


இத்தனை நாள் எங்கேயா காணாமல் போயிருந்தே..அவ் கிடைச்சுட்டாருய்யா இப்ப கிடைச்சுட்டாரு


விவேகானந்தன், சுவாமி, அழகி ஸ்நேகா சுவாமி
ஸ்நேகாவை கிண்டல் செய்து ஜாலியாக நேரத்தை கழித்தோம்




விவேகானந்தன், சுவாமி, குமார் (சுவாமியின் வீட்டில்)

‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே..




விவேகானந்தன் சங்கர் அம்மாவுடன்

மாமி விவேகானந்தன் தன் மகள் திருமணத்திற்கு செய்த உதவிகளை எல்லாம் மறக்காமல் நினைவு கூர்ந்து பலமுறை சொல்லி மகிழ்ந்தார்கள்... ஆனால் அன்று நடந்தது விவேகானந்தருக்கு நினைவுக்கு வரவில்லையாம்... எங்களை எல்லாம் பார்த்தபோது மாமி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். முன்புபோன்றே கடகடவென பேசினார்கள். 74 வயதாச்சு என்க்கு நோ சுகர், நோ பீபி. கொஞ்சம் முட்டுதான் வலிக்கிறது, அதிக நேரம் நடக்க முடியாது, இருந்தாலும் சபரிமலைக்கு ஒரு முறை போய்ட்டு வந்துட்டேன் என்று குழந்தைபோல் சந்தோஷமாக சொல்லி மகிழ்ந்தார்கள்.

Wednesday, September 14, 2011

நண்பர் கிருஷ்ணகுமாரின் பிறந்தநாள்


படத்தில் ராம்கி, கிருஷண குமார், லட்சுமணன், குமாரசாமி, சங்கர் மற்றும் யோகேஷ்குமார்


கோவை தி ஐ பவுண்டேஷனில் பணிபுரியும் நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 3ம் தேதி என் அறையில் நடந்தது. கேக் வெட்டி கொண்டாடினார். இப்புகைப்படத்தை சிஎப்ஒ திரு சிவராமகிருஷ்ணன் கிளிக் செய்தார். உடனே புகைப்படங்களை டவுன்லோடு செய்து எங்கள் அனைவருக்கும் அனுப்பினார்.




.

Saturday, August 13, 2011

கொச்சினில் ராம்கி

கொச்சினில் ராம்கி


அகில இந்திய கண்மருத்துவர்கள் சங்க விஞ்ஞானக் குழு சந்திப்பு 23.7.2011 அன்று கொச்சினில் சிறப்பாக நடைபெற்றது. விஞ்ஞானக்குழு தலைவர் டாக்டர் ராமமூர்த்தி அவர்கள் இந்த மீட்டிங் முடிந்ததும், சிறப்பாக நடைபெற்றமைக்கு ராம்கியை பாராட்டினார்.
படத்தில்



சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் குரோவர், விஞ்ஞானக்குழு தலைவர் டாக்டர் ராமமூர்த்தி அவர்களுடன் ராம்கி. (புகைப்படம் கிருஷ்ண குமார், கோவை)




Thursday, August 11, 2011

BIRTHDAY GREETINGS TO DR. D. RAMAMURTHY


அன்புள்ள டாக்டர் ராமமூர்த்தி அவர்களே……


11 8 2011
Krishna Kumar, Dr.D. Ramamurthy & Ramki

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!
அந்த ஆதவன் போல் புகழ்பெற்று யாவர்க்கும் கண்ஒளி கொடுக்கின்றீர்!!
உங்களால் உலகம் இருள்தொலைத்து ஒளி அள்ளட்டும்!
உங்களதுவாழ்க்கை வரலாற்றின் கை பிடித்துவழி சொல்லட்டும்!!

உங்கள் லட்சியப் பாதையில் நகரம்தோறும் ‘தி ஐ பவுண்டேஷன்’ முளைக்கட்டும்!
உங்கள் பட்டான கைகள்பட்டுபட்டு பல்லாயிரங்களுக்கு கண்ஒளி கிடைக்கட்டும்!!
‘லேசான’ ஆளில்லை மன்னா நீவீர்!
‘இன்ட்ராலேசில் மாமன்னரே’ நீவீர்!!

‘லாசிக்’கால் உங்களுக்கு பெருமையா? யார் சொன்னது
உங்களால் தான் ‘லாசிக் உலகுக்கே’ பெருமை!!
ஞானஒளி கொண்ட கண்ணனைப்போல் நீங்கள்
கண்ணுக்கு கண்ணாய் எங்களைக் காக்கின்றீர்

உங்களது பிறப்பால் உங்கள் குடும்பத்தாருக்கு மிகப்பெருமை!
உங்களுடன் கைகோர்த்து நடப்பதால் பெருமையோ பெருமை!!
உங்களது சேவையால் கோவைக்கே பெருமை!
உங்களது விருதுகளால் விருதுக்கே பெருமை!!

பொறுமை ஆண்டவன் பூமி ஆள்வான் என்பர்!
பொறுமையின் சிகரமே நீங்கள் என்போம் நாங்கள்!!
விடாமுயற்சிக்கு உங்களைத்தவிர யார் உதாரணம்
வெற்றிமேல் வெற்றி உங்களுக்கு சர்வ சாதாரணம்!! !!
.
இந்த நாள் இனிய நாள். உங்கள் பிறந்த நாள்
வாழிய வாழிய வாழியவே நீவீர்
இன்றுபோல் என்றும் இன்முகத்துடன் வாழிய வாழியவே!! !! !!
- ராம்கி

Wednesday, August 10, 2011

விவரமான ஆளு விவேக், நண்பேன்டா



(குமாரின் மலரும் நினைவுகள் சில)


விவேக் என்றதுமே நமக்கு காமெடி நடிகர் விவேக் தான் நினைவுக்கு வருவார். இருந்தாலும்
30 வருடங்களுக்கு முன்பு டைப்பிங் இன்ஸ்டூட்டில் டைப்ரைட்டிங் மற்றும்
சுருக்கெழுத்து கற்றுக்கொண்டிருக்கும் போது எனக்கு அறிமுகமானவர் தான் விவேகானந்தன்
எனும் விவேக். இவரை ஆனந்த் என்று அவரது உறவினர்கள் அழைப்பர்.
அப்போது இன்ஸ்டூட் மேனேஜராக இருந்தவர் திரு சுப்பாராவ் அவர்கள்.

நாங்கள் முதலில் சந்திக்கும் போது அவர் கே. கே. நகர் பஸ் நிலையம் எதிரே ஆவின் பால்
நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். எப்போது இவரைப் பார்க்கச் சென்றாலும்,
எதிலே உள்ள டீ கடைக்கு அழைத்துச்சென்று டீ மற்றும் சுவையான பட்டர் பிஸ்கட் வாங்கி
கொடுப்பார். 'பிளேவர்டு மில்க்' கொடுத்து உபசரிப்பார். ஒரு முறை என்னை
சாலிகிரமத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றார். நான் முதலில் சென்ற நாள்
பொங்கல் திருவிழா நாள். அதனால் அவரது அன்னையார் எனக்கு பொங்கல், வடை, பாயசம் என விருந்து படைத்தனர். தனது இரு சகோதரர்களையும் சகோதரிகளையும் அறிமுகப்படுத்தி
வைத்தார்,ஒவ்வொரு பொங்கல் நாள் அன்றும், நான் விவேக் வீட்டிற்கு சென்றதை நினைக்காமல் இருந்ததில்லை. அன்றிலிருந்து எங்களது நட்புப்பாலம் தொடர்ந்து வருகிறது,


நான், சுவாமி, விவேக், சங்கர், சேகர், ரமேஷ் போன்ற ஒரு குட்டி கேங்க் அமைந்தது.
அனைவரும் ஒன்று சேர்ந்து மாலை 'வாக்கிங்' செல்வது, சினிமா படம் பார்ப்பது என்று
நேரத்தை கழிப்போம். அப்போது சுவாமி தான் அதிகமாக ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்.
பின் விவேக்கும் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். நாங்கள் ஓட்டலுக்கு அடிக்கடி
செல்வோம். அப்போது நாங்கள் அனைவரும் துர்கா ஓட்டலுக்கு போகலாம் என்று
முடிவுசெய்வோம். ஆனால், விவேக் மட்டும், வேறு ஒரு ஓட்டல் பெயரைச் சொல்லி அங்கு
போகலாமே என்பார். நாங்கள் அனைவரும் ஒன்று நன்றாக இருக்கிறது என்றால், விவேக் அப்படி ஒன்றும் நன்றாக இல்லை என்று எதிர் மறையாக பேசுவார். அடிக்கடி இப்படி எதிர் மறையாக பேசுவதால், நான் ஒரு நாள் பொறுமை இழந்து, 'ஏன் இப்படி எதற்கு எடுத்தாலும்
எதிர்மறையாக பேசுகிறாய் விவேக்' என்று கேட்டுவிட்டேன். 'எல்லோருமே நன்றாக இருக்கு என்று சொல்லும் போது, நான் மட்டும் எதிர் மறையாக பேசுவதால், எனக்கு தனி மதிப்பு' போன்ற ஏதோ ஒரு காரணம் சொன்னார். ஆனால் அது சரியாக எனக்கு இன்று நினைவில் இல்லை. இவரது இச்செய்கையை நான், சுவாமி, மற்றும் சங்கரும் பேசும் போது கலாட்டா செய்வோம்.


திநகரில் ஒரு கெமிகல் கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது எனக்கும் அந்த
கம்பெனியில் சில காலம் டைபிஸ்ட் வேலை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். பிறகு
மவுண்ட் ரோடில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தபின், அந்த கம்பெனியில்
எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்கு அவர் முயற்சி செய்தார்.

இவரது சகோதரர் சகோதரிகளின் திருமணத்தில் நாங்கள் கட்டாயம் இருப்போம். அவரது
நெருங்கிய உறவினர்களுக்கு எங்கள் மூவரையும் நன்றாக தெரியும். அனைவரும் அன்போடு
என்னுடன் பழகுவர். திருமணமான ஒரு சகோதரியின் வீட்டிற்கு ஒரு முறை
அழைத்துச்சென்றார். இவர் வீட்டில் இருந்தால் எதையாவது சொல்லி சிரிக்க வைப்பார்
அனைவரையும். ஒரு முறை திரு சுப்பாராவ் அவர்களுக்கு குழந்தை பிறந்த போது, 'என்ன
குட்டி போட்டாச்சா?' என்று கேட்டது எங்கள் அனைவரையும் வருத்தம் அடையச்செய்தது. சில சமயம் தமாஷாக இவர் பேச, எங்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கும்!!

காலங்கள் ஓடின… அவருக்கு காதல் திருமணம் முடிவானது. காதலியை ஒருமுறை எங்களுக்கு
அறிமுகப்படுத்தினார். திருமணம் தி. நகரில் உள்ள திருமணக்கூடத்தில் சிறப்பாக
நடந்தது. நானும், சங்கரும் அவருடன் இருந்து திருமணத்தில் சில காரியங்களை செய்து ஒரு
குடும்பத்திருமணம் போன்று மகிழந்தோம். எனது திருமணத்திற்கும் விவேக் நெல்லைக்கு வந்திருந்தார்.

மங்கை இதழில் பணியாற்றும் போது, ஒரு இளம் தம்பதிகளை வைத்து தீபாவளி இதழுக்கு ஒரு போட்டோ பேட்டி எடுக்கவேண்டும் என ஆசிரியர் என்னிடம் சொல்ல, நான் உடனே அண்மையில் திருமணம் ஆகியிருந்த விவேக் அனு தம்பதிகளை அறிமுகப்படுத்தினேன். சுமார் 10 புகைப்படங்களுடன் விவேக் அனு போட்டோக்கள் 2 பக்கத்திற்கு மங்கை இதழில் வெளியானது. பலர் அப்புத்தகத்தை பார்த்து பாராட்டியதாக இத்தம்பதிகள் பின்னர் என்னிடம் சொன்னார்கள். இந்நிகழ்ச்சி அவர்களுக்கு நிச்சயம் ஒரு மறக்க முடியாத சம்பமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.


ஒரு முறை நாங்கள் அனைவரும் தம்பதிகளாக கோடைகானலுக்குச் சென்றோம். இதில் சுவாமி, சங்கர், விவேக் மற்றும் அவரது மனைவியின் தம்பியும் வந்தார்கள். சாமியின் மகன் ஷியாம் அப்போது கைக்குழந்தையாக இருந்தான். ரயிலில் ஒருபுடவையை கட்டி அதில் உறங்கிகொண்டிருக்க, திடீரென துணி கிழற்று விழ, குழந்தை ஒருவரது மடியில் டக் என விழுந்தான். நல்ல வேலை, குழந்தைக்கு அடிபடவில்லை. சங்கரின் கைக்குழந்தை வினோத்க்கு குளிர் ஒத்துக்கொள்ளாமல் காய்ச்சல் அடித்தது. மற்றபடி எங்களது இந்த பிக்னிக் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்று பல முறை வரவேண்டும் என முயற்சி செய்தோம், ஆனால் அது இன்று வரை நடக்கவில்லை.

பிறகு கோவையில் அவருக்கு வேலைகிடைக்க, ஒரு வீட்டையும் கட்டினார். நான், சுவாமி,
சங்கரும் அவரது புதுமனை புகுவிழாவிற்கு சென்ற வந்தோம். நாங்கள் அவருக்கு ஒரு
அலங்கார விளக்கு ஒன்றை பரிசாக கொடுத்தோம். அதை மவுண்ட் ரோடில் உள்ள ஒரு கடையில் வாங்கினோம். பிறகு எனது சகோதரர் மகள் காயத்ரிக்கு வங்கித் தேர்வு கோவையில் நடக்க,எங்களை அவரது வீட்டில் 3 நாட்கள் தங்க வைத்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். இதையும் மறக்க முடியாது.

எனது அன்னை இறந்த செய்தி கேட்டு, ஆறுதல் சொல்ல விவேக் என் போரூர் வீட்டிற்கு ஒரு
முறை வந்து சென்றார்.

காலச்சக்கரம் மேலும் சுழல்கிறது. சென்னைக்கு மீண்டும் வேறுவேலை கிடைக்க விவேக் நடப்பு தொடர ஆரம்பித்தது. அப்போது சென்னையிலும் ஒரு பெரிய வீட்டை கட்டினார். அதன் புதுமனை புகுவிழாவிற்கு சுவாமி மற்றும் சங்கரை அழைத்த விவேக், என்னை அழைக்கவில்லை. அது ஏன் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இருப்பினும் எங்கள் நட்புக்கு குறுக்கே இது ஒரு பெரிய தடையா இருந்ததில்லை. நான் என்றும் வசதி வாய்ப்பைப் பார்த்து நட்பை பரிமாறியது கிடையாது. முதன் முதலில் எப்படி சந்தித்தேனோ, அப்படியே மற்றவர்கள் எவ்வளவு பெரிய வசதிக்கு மாறினாலும் அதே அன்போடு தான் பழகி வருகிறேன்.


பிறகு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, மெல்ல மெல்ல எங்கள் நட்பு வட்டதில் இருந்து
விவேக் விலகினார். நாங்கள் ஏன் இப்படி திடீரென யாருடனும் தொடர்பில் இல்லை என்று
தலையை பிய்த்துகொண்டோம் பிறகு இவரது உறவினர் ஒருவரை போரூரில் சந்திக்க அவரிடம் இருந்து தொலைபேசி எண் கேட்டு நானாக தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன்.

இவரது சகோதரர்கள் அன்பழகன், கோவிந்த ராஜ் எங்களை மிகவும் அன்போடு நடத்துவார்கள்.

எனது மனைவி சீதாவை உரிமையோடு ஒரு சகோதரர் அழைப்பது போன்று பெயர் சொல்லி சீதா என அழைக்கும் நட்பு வட்டதத்தில் இவரும் ஒருவர்.


கடுமையாக உழைத்து பல சோதனைகளை தான்டி, தன் சொந்த கம்பெனிக்கு இயக்குநர் என்ற அளவில் சுயதொழில் செய்து வருகிறார் விவேக். இவரது மனைவி அனு. அன்போடு பழகக்கூடியவர், இவர்களுக்கு ஒரு மகள் சுசித்ரா மற்றும் இரட்டை மகன்களும் 11 வகுப்பு படித்து வருகிறார்களாம். இவரையும் இவரது குடும்பத்தாரையும் பார்த்து பல வருடங்கள் ஆவிட்டது, விரைவில் சந்திப்போம்.

வளர்க முன்பு போல் எங்கள் அனைவரது நட்பும்.

நண்பேன்டா ................நண்பேன்டா ........................நண்பேன்டா