Saturday, March 26, 2011

மடிசார் லட்சுமி அத்தங்காள்

மலரும் நினைவுகளில் குமார்

எங்கள் குடும்பத்தில் அப்புடு தாத்தா அத்திம்பேர், லட்சுமி அத்தங்காள் மறக்க முடியாத மூத்த தம்பதிகள். அப்புடு தாத்தா எப்போதும் வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியில் இருப்பார். எப்போதும் கையில் மூக்குப்பொடி டப்பா இருக்கும். மூக்கில் எப்போதும் மூக்குப்பொடி இருந்து கொண்டு இருக்கும். அவர் பக்கத்தில் சென்றாலே மூக்குப்பொடி நெடி அடிக்கும்.

லட்சுமி அத்தங்காள் எப்போதும் மடிசார் புடவையில் தான் இருப்பார்கள் இருவருமே மிகவும் எளிமையானவர்கள். மிகவும் கஷ்டப்பட்டு தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள். எங்கள் குடும்பங்களுக்கு லட்சுமி அத்தங்கா வந்தால் தான், எல்லா விசேஷங்களும் நிறைஞ்ச மாதிரி இருக்கும். எப்போதும் கலகலப்பாக லட்சுமி அத்தங்காள் பேசுவார்கள். என் திருமணத்திலும கலந்து கொண்டு இத்தம்பதிகள் வாழ்த்தினார்கள். அனைவரிடமும் அன்புடன் பேசுவார்கள். அனைவரிடமும் மிக பாசமாக இருப்பார்கள். சின்னக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இத்தம்பதிகள் அனைவரிடமும் பேசிப்பழகும், நல்ல சுபாவம் கொண்டவர்கள்.


லட்சுமி அத்தங்காள், மகள் அம்புஜம், உமா பாபுலு, அன்னம், தங்கம்
(போட்டோ உதவி: திரு விஸ்வநாதன் & அன்னம், மும்பை)

லட்சுமி அத்தங்கா முறுக்கு மற்றும் அனைத்து பட்சணங்கள் செல்வதில் மிகப்பெரிய எக்ஸ்பெர்ட். எனது பூணலுக்கும், மற்ற வீட்டு விசேஷங்களுக்கும் இவர்கள் தான் அத்தனை பட்சணங்களையும் தொடர்ந்து செய்வார்கள். வேகமாக முறுக்கு சுற்றுவதில் திறமைசாலி. ஒரே மாதிரியான முறுக்களை சுற்றுவது ஒரு தனிக்கலைதான். ஒரு கை, முறுக்கு சுற்றிக்கொண்டே இருக்கும், மற்றொரு கை, எண்ணெயில் மிதக்கும் முறுக்கை திருப்பிப் போட்டுக்கொண்டே இருக்கும். சுடச்சுட சாப்பிடும் போது தனிச்சுவைதான். சின்னக் குழந்தைகளாக நாங்கள் இருக்கும் போது, அவ்வப்போது தான் சுற்றும் முறுக்குகளை கொடுப்பார்கள். அரை வேக்காடு முறுக்கு என் அம்மாவிற்கு ரொம்ப பிடிக்கும். அவர்களுக்காக அரை வேக்காடு முறுக்குகளை போட்டு தருவார்கள் லட்சுமி அத்தங்காள். ஒருவர் வீட்டில் விசேஷ தேதி முடிவானதும், முதலில் அத்தங்காவிடம் பேசி அவர்களின் டேட்டையும் வாங்கிவிடுவார்கள். அவ்வளவு பிஸியாக அத்தங்கா இருப்பார்கள். தொடர்ந்து அடுப்புகிட்டே இருந்ததாலும், எண்ணெய் வாசனையாலும் அத்தங்கா சில சமயம் மூச்சுவிட சிரமப்படுவார்கள். இருப்பினும் முடியும் வரை அனைவருக்கு மறுக்காமல் உதவிசெய்தார்கள்.

என் அப்பா, பெரிய அத்தை, சின்ன அத்தை, லட்சுமி அத்தங்காள், நாராயணி அத்தங்காள் போன்றவர்கள் வடபழனி வீட்டில் இருந்த போது, ஒன்று சேர்ந்தால் எங்களுக்கு ரொம்ப குஷியாக இருக்கும். வீடே கல்யாண வீடு போன்று காட்சி அளிக்கும்.


புரசைவாக்கத்தில் மிகச்சிறிய வீட்டில் லட்சுமி அத்தங்காள் இருந்தபோது பலமுறை சென்றுள்ளேன். அன்போடு உபசரிபார்கள். 'சாப்பிட்டுவிட்டு போ கோந்தே..என்ன சாப்பிட்டாய்?' என்பார்கள். எப்போது சென்றாலும் பெரிய டம்பளரில் காபி போட்டு தருவார்கள். அப்போது சின்னச்சின்ன சுண்டெலிகள் அங்கும் இங்கும் ஓடும். 'பாவம் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே'என மனதிற்கு கஷ்டமாக இருக்கும். ஒரு முறை வீட்டிற்கு சென்றபோது அவர் பாதுகாத்துவந்த பழைய ஓலைச்சுவடிகளை காட்டினார்கள்.

நாங்கள் சின்னக்குழந்தையாக இருந்த போது அவ்வப்போது, எங்கள் மீனா பெரியமா வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளையும், சம்பவங்களையும் நினைவுகூர்வார்கள். 'உன் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கா தெரியாமா கோந்தே?' என்று கூறி, என் அம்மாவும், மற்ற என் குடும்பத்தினரும் பட்ட கஷ்டங்களை எனக்கு அதிகமாக சொல்லியதே லட்சுமி அத்தங்காள் தான். அந்த சம்பவங்களை இன்று நினைத்தாலும், இதை எழுதும் போதும் என் கண்கள் கலங்குகிறது.

நானும் சீதாவும் ஒரு முறை சுமங்கலி பிரார்த்தனை நடத்த முடிவு செய்து அத்தங்காவை அசோக் நகர், அம்புஜம் அக்காவீட்டில் சந்தித்தோம். சுமங்கலி பிரார்த்தனை எவ்வாறு நடத்தவேண்டும், என்னென்ன சமைக்க வேண்டும் என்பது முதல் அனைத்தும் படிப்படியாக சொல்லிக்கொடுத்தார்கள். அதை அப்படியே எழுதிக்கொண்டோம். பிரார்த்தனை, லட்சுமி அத்தங்காவின் தங்கை, நாராயணி அத்தங்கா மூலம் மிகச்சிறப்பாக நடந்தது. அடுத்த நாள் நானும் சீதாவும், லட்சுமி அத்தங்காவை பார்த்து, அவருக்கும் 9 கஜம் புடகை எடுத்துக் கொடுத்து நமஸ்கரித்தது மறக்க முடியாத நிகழ்ச்சி. அடுத்த சீனியர் வடபழனியில் உள்ள அத்தான் மன்னிக்கும் புடவை எடுத்துக்கொடுத்தேன் என்று அறிந்து 'நன்னாச்சுடா கோந்தே......' என்றார்கள். இவருக்குப்பிறகு, எங்கள் வீட்டில் 'மடிசார்' கட்டும் மாமிகள் யாரும் கிடையாது என்பது வருத்தமான விஷயம்!!!

ஒரு முறை நாராயணி அத்தங்காவும், லட்சுமி அத்தங்காவும் போரூர் வீட்டிறகு வந்து ரொம்ப நேரம் இருந்தார்கள். எப்போது சந்தித்தாலும் என்னுடன் அவர்களது பழைய வாழ்க்கையை மனம் திறந்து பகிர்ந்து கொள்வார்கள். எங்கள் இருவரது குடும்பமும் பட்ட சிரமங்களை விவரமாக சொன்னார்கள். இரண்டு அத்தங்காவும் ஒன்று சேர்ந்து எங்கள் அழைப்பை ஏற்று வந்த நாள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஸ்ரீராமிடம் இருவருமே நன்றாகபேசி மகிழ்ந்தார்கள்.


நான் கோவை வந்த பிறகு அவ்வப்போது பாலக்காட்டில் உள்ள எங்கள் 'சிட்டலன்சேரி' பகவதி கோவிலுக்கு செல்வதுண்டு. ஒருமுறை லட்சுமி அத்தங்காள் அப்போது பல்லாவூரில் இருப்பது அறிந்து, அவரை பார்க்கச்சென்றேன். இயற்கை அழகுடன் அந்த வீடு அமைந்திருந்தது. வீட்டிற்கு எதிரே பெரிய கோவில் குளம். அருகே கோவில். சுடச்சுட காப்பி கொடுத்தார்கள் எனக்கும் நான் அழைத்துச்சென்ற ஆட்டோ டிரைவருக்கும். மூன்று நான்கு முறை எங்கள் காவுக்கு செல்லும் போது, லட்சுமி அத்தங்காவை பார்த்துவிட்டு செல்வேன். என்னுடன் காவுக்கு வர அழைத்தேன், உடல் நலம் காரணமாக என்னுடன் காவுக்கு வரவில்லை. ஒரு முறை 'பக்கத்தில் உள்ள கோவிலுக்கு போயிட்டு போடா கோந்தே' என்றார்கள்.அது போல் நான் கோவிலுக்குள் சென்றுவந்தேன். மிகப் பெரிய கோவில்.

நாராயணி அத்தங்காள் இறந்தபின் துக்கம் கேட்க வளசரவாக்கம் வீட்டிற்கு சென்றபோதும், எங்களிடம் நாராயணி பற்றி நிறைய பேசினார்கள். தன் சகோதரி இறந்து செய்தி அவரை மிகவும் பாதித்ததாகவம் கூறி அழுதார்கள். அண்மையில் லட்சுமி அத்தங்காவை SOORYA மருத்துவமனயில் பார்ததபோது சற்று சோர்வாக இருந்தார். மூக்கில் அக்ஸிஜன் மாஸ்க், டியூப் இருந்தது. இதயத்துடிப்பை கண்காணிக்கும் மானிடர் ஓடிகொண்டே இருந்தது.
அவ்வப்போது ஆக்ஸிஜன் மாஸ்கை எடுத்து விட்டு பேசினார். அப்போது அத்தங்காள் நைட்டியில் இருந்தார்கள். ஏசிக்கு எதிரே உட்கார்ந்தபடியே இருந்தார்கள். எங்கள் குடும்பத்தார் மணி, விஜயராகவன், கமலா மற்றும் அனைவரின் மீது தனி அன்பும் பாசமும் வைத்திருந்தார்கள், மருத்துவனையிலும் இவர்களின் பெயரை தனித்தனியே சொல்லி நலம்விசாரித்தாகள். எல்லோரும் நல்லா இருக்கால்ளயோ, என்றார்.

இரட்டை சகோதரிகள் போன்றே இரண்டு அத்தங்காக்களும் இருப்பார்கள். இருவரிடமும் ஒரே மாதிரி குணங்களை காணமுடிந்தது. நாராயணி அத்ததங்காவுடன் நான்பேசும் போது, எச்எம் இருக்காங்களா என்றும், மாற்றுக்குரலில் பேசுவேன். பிறகு நான் தான் பேசுகிறேன் என்று அறிந்து மகிழ்வார்கள். அவர்களை சொஞ்ச நேரமாவது சிரிக்க வைத்த மகிழ்ச்சி எனக்கு. லட்சுமி அத்தங்கா எங்களை 'கோந்தே....கோந்தே' என்று அழைப்பார்கள். ஒருபோதும் 'வாடா' 'போடா' என்று பேசியதே கிடையாது. நாராயணி அத்தங்கா பேசும் போது, 'இதைக்கேளு'... 'இதைக்கேளு' என்ற வார்த்தையை பலமுறை உபயோகிப்பார்கள்.

லட்சுமி அத்தங்கா தன் கண்களை தானம் செய்து மற்ற இருவருக்கு உலகை பார்க்க விழி கொடுத்து சென்றுள்ளார் என்று நினைக்கும் போது, நமக்கு பெருமையாக இருக்கிறது, இது போல் நம் வீட்டிலோ, நெருங்கிய சுற்றத்தார் வீட்டில், சம்பவம் ஏற்படும் போது, கண் தானம் பற்றி அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். துக்கத்தில் மறவாமல், கண் தானத்திற்கு ஏற்பாடு செய்த அவரது பேத்தி டாக்டர் அணுவை (கண் மருத்துவர்) பாராட்டவேண்டும். கண் தானம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
இறந்த 6 மணி நேரத்திற்குள் கண் தான்ம் செய்யவேண்டும். அருகில் உள்ள ஏதாவது ஒரு கண் மருத்துவமனைக்கு போன் செய்து சொன்னால் போதும். 10 நிமிடத்தில் கண்ணில் உள்ள கருவிழி எனும் கார்னியாவை மட்டும் எடுத்துச்செல்வார்கள், பிறகு யார் பார்த்தாலும் எந்த வித விகாரமும் முகத்தில் இருக்கவே இருக்காது. தானத்தில் சிறந்தது கண்தான்ம் அன்றோ?


லட்சுமி அத்தங்காள், நாராயணி அத்தங்காவின் மறைவு எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஒரு பெரிய இழப்பாகும். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறேர்ம்.
KUMAR

5 comments:

  1. Really very nice article and its very touching, covering each & every
    aspect of Lakshmi mami.
    -M. K. Narayanaswamy,
    *
    Good report, Kukmar. Quite moving and absolutely realistic.
    Athan.
    Meena, Show to Vicha, He will be able to read and will love this report.
    Anna
    *
    அருமையாக இருந்தது குமார் மாமா.
    புவனா மணிகண்டன்

    ரொம் நல்லா எழுதியிருக்காய் குமார்
    ரொம்ப டச்சிங்கா இருந்தது.
    கமலா

    ReplyDelete
  2. dear brother

    very nice article we all miss daughters of neelakantan thatha

    ReplyDelete
  3. குமார், லட்சுமி அத்தங்கா பற்றிய உனது கட்டுரையை படித்தேன். நன்றாக எழுதியுள்ளாய். படித்து அழுதுவிட்டேன்.
    என் கணவரிடமும் படித்து காண்பித்தேன். மிகவும் நன்றாக உள்ளது, உடனே குமாருக்கு போன் போடு என்று சொன்னார்.
    கிரிஜா, வளசரவாக்கம் சென்னை 6.4.2011

    ReplyDelete
  4. நம்வீட்டின் முதியவர்கள் ஒரு பொக்கிஷம். அவர்கள் வாழ்ந்தகாலம் வறுமையின் வழிச்சுவடுகள் நிறைந்தது. பாசமும் பண்பும் இரண்டறக்கலந்து உற்றார் உறவினர்களை அணைத்து வாழ்வதே வாழ்வின் நெரிமுறை என்று வாழ்ந்தவர்கள். எனவே அவர்களுடன் வாழ்ந்த சம்பவங்கள் இனிமையாக நம் மனதில் என்றும் பதிந்திருக்கும். நீங்களும் அவற்றை நினைவுகூர்ந்துள்ளீர்கள். நீங்கள் கூறியபடி இன்று அத்தகைய மனிதர்களை கண்பது அரிது. அமைதியான நீரோடை போல் இருந்த வாழ்க்கை இன்று பொங்கும் புனலாய் பாய்ந்து ஓடுகின்றது. எல்லோரும் தலைதெறிக்க ஓடிக்கொண்டே வாழ்க்கைப்பயணத்தை தொடர்கின்றனர். இந்நிலையில் மடிசார் கட்ட நேரமில்லாமல் போனது ஆச்சரியம் இல்லை.

    லட்சுமி அத்தங்காள் அவர்கள் சென்னை புரசைவாக்கத்தில் வாழ்ந்தார்கள். நானும் என் குடும்பத்துடன் புரசைவாக்கத்தில் 17 ஆண்டுகள் வசித்து வந்தோம். எனவே லட்சுமி அத்தங்காள் எங்கள் ஊர் அம்மையார். அவர் மறைவில் உங்களுடன் நானும் துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுகின்றேன். அவரின் அன்மா இறைவன்னடியில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்,
    அன்புடன்,
    இராமச்சந்திரன்

    ReplyDelete
  5. அன்பு நண்பர் வடாலாரே! வணக்கங்கள்." லெட்சுமி அத்தங்கார்" பற்றிய உங்கள் " நினைவூற்றுத் துளிகளை "
    BLOG ல் படித்தேன்.பரவசமானேன் . நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், இவர் போன்ற ,லெட்சுமி அத்தங்கார்களும்
    அந்தாணு மாமாக்களும் , நாராயணி/ கன்யாம்பா/பகவதிப் பாட்டிகளும், பகவதீஸ்வரன் / நீலுத் தாத்தாக்களும்
    நிச்சயமாக இடம் பெற்றுள்ளனர். யாரும் இதனை மறுக்க முடியாது. நம் இதயத்தின் ஒரு மூலையில் நிரந்தரமாக
    இவர்கள் இடம் பிடித்துள்ளனர். அவ்வப்போது, தாழ்வாரத்தில் ,நடுநிசியில், ஊரே நிசப்தமாக உறங்கும் வேளையில் ,
    கயிற்றுக் கட்டிலில் அண்ணாந்து படுத்துக்கொண்டு, ஆகாயத்தில் உலா வரும் முழு நிலவையும், நட்சத்திரக் கூட்-
    டங்களையும் ரசித்துகொண்டே, பக்கத்தில் பழைய பித்தளைத் தட்டில் உள்ள முறுக்கு-சீடை சங்கதிகளை ரசித்துச்
    சுவைத்துக்கொண்டே , " லெட்சுமி அத்தங்கார், அந்தாணு மாமா , நாராயணி/கன்யாம்பா/பகவதி பாட்டிகள், பகவதீஸ்வரன்/
    நீலுத் தாத்தாக்கள்" பற்றிய நீங்கா நினைவுகளை , அனுபவித்து அசைபோடும் பொழுது கிடைக்கும் சுகத்திற்கு ஈடு இணை
    இவ்வுலகில் எதுவுமேயில்லை. சுருங்கச் சொல்லின், உங்கள் , " லெட்சுமி அத்தங்கார் " நினைவலைகள் , நம் ஒவ்வொருவரையும்
    நம் கடந்த கால, " PAST -O -GRAPH " கே fast ஆகக் கூட்டிச் சென்று , பழைய இனிய நினைவுகளை ,மனக்கண்முன் கொணர்ந்து , மகிழ்ச்சியின்
    உச்ச கட்டத்திற்கே கொண்டு சென்று, கண்களிலிருந்து " ஆனந்தக்-கண்ணீர்-அருவி"யை வரவழைத்து விட்டது.
    மலையாட்டூர் ராமகிருஷ்ணன் எழுதிய " வேர்கள்" என்ற புதினம் படித்த பாதிப்பு ஏற்பட்டது.
    தொடரட்டும் உம் பணி.
    நன்றி.நன்றி. நன்றி.
    என்றும் அன்புடன்
    N .சுந்தரம் ,தானே (கிழக்கு) .

    ReplyDelete