Thursday, March 1, 2012

கமலா அம்மா பற்றிய நினைவலைகள் RAMKI

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதனில்லை

கமலா அம்மா பற்றிய நினைவலைகள்
A TRIBUTE TO KAMALA AMMA BY RAMKI



மூத்த கண் மருத்துவர் என்.எஸ். சுந்தரம் அவர்களின் துணைவியார், மும்பை கண் மருத்துவர் எஸ். நடராஜன், ஸ்ரீராம் மற்றும் சௌர்ணாவின் அன்னை இவர்.

நான் மும்பையில் மருத்துவர் எஸ். நடராஜன் அவர்களிடம் 6 வருட காலங்கள் பணிசெய்த போது, எனக்கு அறிமுகமானவர். இவரது சென்னை தி நகர் வீட்டிற்கு ஓரிரு முறை சென்றதுண்டு. அப்போது திரு. சுந்தரம் மற்றும் திருமதி கமலா சுந்தரம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இவர்களது மகள் சௌர்ணா மற்றும் அவரது மகள் விக்னேஸ்வரியும் அன்போடு வரவேற்பார்கள்.
எப்போது வீட்டிற்கு சென்றாலும், சாப்பிடாமல் எங்களை அனுப்ப மாட்டார் கமலா அம்மா அவர்கள். ஒரு முறை நான், மலேஷியா வாழ் திருமதி ரத்னேஸ்வரி மற்றும் அவரது கணவர் திரு ரவி அவர்களுடன் ஒரு மாலைப்பொழுதில் இவரை திநகர் வீட்டில் சந்தித்தோம், அப்போது கமலா அம்மா சுடச்சுட இட்லி தயாரித்து கொடுத்ததை மறக்கமுடியாது.
பின் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த போதும் ஓரிரு முறை நானும், என் மனைவி சீதாவும் சென்று பார்த்துவந்தோம், அப்போதும், இன்னும் சொஞ்ச நேரம் இருங்க… நேரம் கிடைக்கும் போது எங்க வீட்டுக்கு வாங்க என்றும் ஏதாவது சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும் கமலா அம்மா அன்போடு சொல்லுவார்
.
டாக்டர் நடராஜன் அவர்களுக்கு தன் பெற்றோரை தன்னுடன் மும்பையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நீண்ட அவா இருந்தது. அதன்படி கமலா அம்மா நடக்கமுடியாத நிலையிலும், இவரை பத்திரமாக விமானம் மூலம் மும்பைக்கு வரவழைத்து தன் பெற்றோரை கண்ணும் கருத்தமாக கவனித்துக்கொண்டார் திரு, நடராஜன் அவர்கள்.



இந்த மூத்த தம்பதிகள் மும்பையில் தங்கியிருக்கும் போது நிறைய முறை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.

சென்னையில் இருக்கும் போது கமலா அம்மாவால் வெளியுலகை காணமுடியாத சுழ்நிலை இருந்தது. ஆனால் மும்பைக்கு வந்ததும், திரு, நடராஜன் அவர்கள், தன் அம்மாவை வெளியுலக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் செய்தார். தினமும் சில ஊழியர்களை மாலை நேரத்தில் (சுமார் 4 அல்லது 5 மணிக்கு) வரவழைத்து, கமலா அம்மாவை வீல் சேரில் அமர வைத்து, வடாலாவில் உள்ள பார்க்கில் சில மணிநேரம் இருந்து பத்திரமாக வீட்டிற்கு வர ஏற்பாடு செய்தார். அம்மாவிற்கு இப்படி வெளியே வருவது மிக மகிழ்ச்சி தந்தது. ஆனால் இவர் மாடியில் இருப்பதால், கமலா அம்மாவை படுக்கையில் இருந்து பத்திரமாக தூக்கி, சக்கர நாற்காலியில் அமரவைத்து, பின்முதல் மாடியிலிருந்து கீழ் இறக்குவது, பின் மேலே கொண்டுவருவது என்பது ஊழியர்களுக்கு சற்றுசிரமாமாக இருக்கும். அனைத்து ஊழியர்களும் அம்மா அப்பா என்று அன்போடு அழைத்து பாசமழை பொழிந்தனர்.

திரு. நடராஜன் அவர்கள், தன் அன்னையை குணப்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். மும்பையில் உள்ள மிகப்பெரிய மருத்துவர்கள், ஸ்பெஷலிஸ்ட்கள், பிஸியோதெரிபிஸ்ட்கள் போன்றவர்களை உடனுக்குடன் ஏற்பாடு செய்து, மிகச்சிறப்பாக தம் அம்மாவையும், அப்பாவையும் எந்த வித குறையும் இன்றி பார்த்துக்கொண்டார்.

அம்மாவை பார்த்துக்கொள்ள ஆள் கிடைப்பது முதலில் சற்று கஷ்டமாக இருந்தது, பிறகு ஓரிருவர் வந்த பின் அந்த பிரச்சனையும் எளிதில் முடிவுக்கு வந்தது. கமலா அம்மா படுத்திருந்த படியே, எவ்வாறு தன் மகனுக்கு பிடித்த உணவு வகைகளை செய்வது என்று சமையல் செய்யும் பெண்மணிக்கு சொல்லித்தருவார்.



இந்த மூத்த தம்பதிகளின் திருமண நாள், மற்றும் பிறந்த நாள் என்றால் திரு நடராஜன் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அம்மாவுக்கு பட்டுபுடவை எடுப்பது, புதிய நகை வாங்கி பரிசளிப்பது என்று அசத்துவார். அப்பாவுக்கும் புதிய கோட்சுட் வாங்கி, இளமையாக்கிவிடுவார். அவர்களுக்கு எதுவேண்டுமோ அதையே வாங்கி கொடுத்து மகிழ்வார். ஒரு பிறந்தநாளுக்கோ திருமண நாளுக்கோ அவருக்கு ஒரு வெள்ளிகாசை பரிசளித்தேன். பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார், அம்மாவுக்கு நிறைய ஊக்கஅளித்து நடக்க முயற்சி செய்யும்படி அடிக்கடி சொல்லுவார் டாக்டர் நடராஜன் அவர்கள்.

இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக இருக்கும். நான் இவர்களுடன் இருக்கும் நேரத்தில், என்னையும் அவர்களோடு அமரவைத்து சாப்பிட சொல்லுவார்கள். சில நாட்கள் அம்மாவுக்கு பணிப்பெண் தான் சாப்பாடு ஊட்ட வேண்டியிருந்தது. இருப்பினும் திரு நடராஜனின் ஊக்கத்தால் அம்மா தனது இடது கையால் தானாக சாப்பிட ஆரம்பித்தார். அமர்ந்தபடியே சிலசமயம் பரிமாரவும் செய்தார். சாப்பிடும் போது, ‘ராம்கிக்கு இன்னும் ஒரு தோசை கொண்டுவாங்க….’ என்று சமையல் கட்டைப்பார்த்து கமலா அம்மா குரல் கொடுப்பார்கள். ‘என்ன போதுமா ராம்கி, இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க..’ என்று அன்போடு திருப்தியாக சாப்பிடும்வரை கமலா அம்மா என்னை இடத்தைவிட்டு எழுந்துகொள்ள அனுமதிக்கமாட்டார்.

‘மதியம் சாப்பிட அப்பாவோட வந்திருங்க, இரவும் இங்கேயே சாப்பிடலாம் லேட்டானாலும் வந்துட்டு போங்க..’ என்று ஒவ்வொரு முறையும் என்னை அழைப்பார் கமலா அம்மா அவர்கள். ஒரு நாள் செல்லவில்லை என்றால், ‘என்ன நேற்று வேலை அதிகமா, நீங்க வீட்டுக்கு வரலயே?’ என்று கமலா அம்மா பாசத்தோடு கேட்பார்.

காலையில் குளித்தல், பிஸியோதெரபி பயிற்சி, மதியம் சாப்பாடு, மாலையில் வெளியே செல்லுதல், முக்கிய விழாக்களுக்கு செல்லுதல், ஆதித்ய ஜோத் மருத்துவமனைக்கு செல்லுதல் என்று சுருசுருப்பாக இருந்தார் கமலா அம்மா அவர்கள். திருநெல்வேலி சமையல் வகைகளை சமையல் செய்யும் அம்மாவுக்கு கத்துகொடுப்பார் கமலா அம்மா.

இவரது அறையில் பெரிய டிவி, வேலையாட்களை அழைக்க மணி, போன்றவற்றையும் பார்த்து பார்த்து, திரு நடராஜன் ஏற்பாடு செய்தார். பலமுறை நான், கமலா அம்மா, அப்பா சுந்தரம், திரு நடராஜன் என அனைவரும் சேர்ந்து டிவியில் சில நிமிடங்கள் ஏதாவது நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்வோம்.


திரு நடராஜன் குளித்துவிட்டு தீபாராதனை செய்யும் போது கமலா அம்மாவையும் அருகே வைத்துக்கொள்வார்.
இத்தம்பதிகள் திருமணநாள் அன்றும் பிறந்த நாள் அன்றும் பல பூஜைகளை ஏற்பாடு செய்வார் டாக்டர் நடராஜன். ஒருமுறை தன் பெற்றோர்களுக்கு பூஜை செய்து, கால் கழுவி, இவர் ஆசிர்வாதம் பெற்றது கண் முன்னே நிற்கிறது,
எந்த பூஜை இருந்தாலும், நானும் இவர்களுடன் இருக்கும் வாய்ப்பை அனைவரும் அளித்தனர், அம்மாவின் பிறந்த நாளின் போது பெரிய வாழ்த்து அட்டை கொடுத்து, மலர் செண்டுகொடுத்து, அனைவரையும் அழைத்து மாலை கேக் வெட்டவைத்து, தன் பெற்றோரின் விழாக்களை சிறப்பாக நடத்தி இருவரையும் பலமுறை திரு. நடராஜன் அசத்தியுள்ளார். சில சமயம் அம்மாவுக்கு நிறைய அலங்காரம் நடக்கும். முக்கிய விழாவின் போது அம்மாவுக்கு புதிய பட்டுப்புடவை கட்டி, தலை நிறைய பூவைத்து, தங்க வளையல், செயின் என்று அலங்கிரித்து கண்டுமகிழ்வார் திரு. நடராஜன் அவர்கள். இரு பெண் உதவியாளர்கள் இவருடன் வெளியே வரும்போது நிச்சயம் இருப்பர்.

இவரது அன்பும் ஆதரவும், இந்த மூத்த தம்பதிகளை மிகவும் மகிழ்ச்சியடைய செய்தது. பெற்றோர்கள் மகனுக்கு ஆதரவாகவும், மகன் பெற்றோர்களுக்கு ஆதரவாக இருந்தது பலரை நெகிழ்ச்சியடைய செய்தது.

நான், கமலா அம்மா, அப்பா, நடராஜன் என்று இருக்கும் போது வீடே கலகலவென இருக்கும். நடராஜன் அவர்கள் ஏதாவது ஜோக் அடித்துக்கொண்டு அனைவரையும் சிரிக்க வைப்பார். மகன் ஸ்ரீராம் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை பார்க்காததும், பேசாதாதும் ஒரு குறையாக கமலா அம்மாவுக்கு இருந்தது என உணர்ந்தேன். மகள் சௌர்ணா மற்றும் பேத்தி விக்னேஷ்வரியை பார்த்துவிட்டால் அம்மாவும் தனி தெம்பு வந்துவிடும். கமலா அம்மாவின் அம்மா, பெரிய ஆச்சியும் வீட்டில் இருந்தால் நடராஜன் அவர்களின் கலாட்டாவுக்கு பஞ்சமேது.

நான் மும்பையிலிருந்து கோவைக்கு வேலைநிமித்தம் வந்தபின் அவருடன் போனில் பேசத்தான் முடிந்தது. திரு நடராஜன் அவர்கள் என்னுடன் போனில் பேசினாலும், தன் அருகே கமலா அம்மா இருந்தால், ‘இந்தாங்கம்மா, ராம்கி லைனில் இருக்காரு..பேசுங்க..’ என்று போனை கொடுப்பார். ‘சீக்கிரம் மூம்பைக்கே வந்திடுங்க…ராசு கூடவே இருந்திடுங்க’ என்பார். ‘சீதா, ஸ்ரீராம் எப்படி இருக்காங்க’ என்று பெயர் குறிப்பிட்டு கேட்பார் கமலா அம்மா.

நான் கொச்சில் நடந்த அகில இந்திய கண் மருத்துவர்கள் மாநாட்டில் பணிசெய்ய சென்ற போது 1.2.2012 விடியற்காலை கமலா அம்மா இறந்த செய்தி, திரு. நடராஜன் அவர்கள் அனுப்பிய எஸ்எம்எஸ் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. வைத்தியநாதன் மற்றும் ராஜன் போன்ற என் நெருங்கிய நண்பர்கள் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்று, திரு நடராஜன் அவர்களுக்கு துணையாக இருந்தது, நான் பங்கேற்ற மனநிறைவு தந்தது.

கமலா சுந்தரம் பிறந்த தேதி 2.12.1937, நம்மை விட்டு மறைந்த தேதி 1.2.2012.

அவரது இழப்பு அவர்கள் குடும்பத்தார் அனைவரும் ஒரு பேரிழப்பாகும். என் சார்பாகவும். சீதா, ஸ்ரீராம் சார்பாகவும் கமலா அம்மாவின் ஆத்மா சாந்தி பெற, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
RAMKI

No comments:

Post a Comment